ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் சுப்பர் புளூ மூன் (பெரும் நீல நிலவு) எனும் அரிய நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூரணை தினத்தின் முழு நிலவு சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவற்றின் அசாதாரண கலவையாக இருக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நிலவு அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது நிகழும் முழு நிலவின் விளைவாக, சந்திரன் 14 வீதம் பெரியதாகவும், கடந்த காலத்தில் பார்த்த சில முழு நிலவுகளை விட 30 வீதம் பிரகாசமாகவும் தென்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது சந்திரன் முழுமையாக தென்பட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் அல்லது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டு பூரணை நிலவுகள் வரும் போது, இரண்டாவது முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. எனினும் இது ஒரு பெயர் மாத்திரமே என்றும், சந்திரன் உண்மையில் நீல நிறத்தில் தென்படாது என்றும் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கிழக்கு வானத்தில் சூரியன் மறைந்த பிறகு இன்று 30 ஆம் திகதி மாலை வேளையில் இருந்து முழு நிலவைக் காண முடியும் எனினும் இந்த நிலவைக் காண சிறந்த நேரம் நாளை 31ஆம் திகதி சூரிய உதயத்திற்கு முன்னர் உள்ள காலப்பகுதியாகும்.
இந்த வாய்ப்பை ஒருவர் தவறவிட்டால், அடுத்த சூப்பர் ப்ளூ நிலவுகளுக்காக 2037 ஜனவரி மற்றும் மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.